கோலாலம்பூர், பிப் 17 – நாட்டில் ஒரே வகை பச்சரிசி திட்டத்தை உருவாக்கும் புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சைட் அபு ஹூசின் தெரிவித்திருக்கும் ஆலோசனை குறித்து அரசாங்கம் எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கவில்லையென விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் வாழ்க்கை செலவின நடவடிக்கை மன்ற அமலாக்க செயற்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து கூட்டாக விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மலேசிய மடானி ஒரே வகை பச்சரிசி குறித்து சைட் அபு ஹூசின் தெரிவித்திருந்த ஆலோசனை தொடர்பாக எழுந்துள்ள குழப்பம் குறித்து விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு தெளிவுபடுத்த விரும்புவதாக முகமட் சாபு விவரித்தார். இந்த ஆலோசனை குறித்து இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. எந்தவொரு முடிவும் 1994ஆம் ஆண்டின் நெல் மற்றும் அரிசி கட்டுப்பாட்டு சட்டத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதோடு இது குறித்து அமைச்சரவையிலும் தெரிவிக்க வேண்டுமென முகமட் சாபு தெரிவித்தார்.