![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-24-Jun-2024-09-47-AM-6368.jpg)
கோலாலம்பூர், ஜூன்-24, 53 லட்சம் ரிங்கிட்டை உட்படுத்திய Vending Machine முதலீட்டு மோசடி தொடர்பில், போலீஸ் இதுவரை 57 புகார்களைப் பெற்றுள்ளது.
மலேசிய மனிதநேய அமைப்பு கடந்த வாரம் நடத்திய செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து அப்புகார்கள் பெறப்பட்டதாக, மத்திய வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குனர் டத்தோ ஸ்ரீ ரம்லி மொஹமட் யூசூப் (Datuk Seri Ramli Mohamed Yoosuf) சொன்னார்.
புகார்தாரர்கர் அனைவரும் அம்முதலீட்டுத் திட்ட மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் என்றார் அவர்.
பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் புகார் செய்யாமல் இருந்தால் விரைந்து அவ்வாறு செய்திட வேண்டும்.
முழுமையான விசாரணை மேற்கொள்ள போலீசுக்கு அது உதவியாக இருக்கும் என டத்தோ ஸ்ரீ ரம்லி சொன்னார்.
முதலீட்டுத் திட்டங்களில் இணையும் முன் ஒரு தடவைக்கு பல தடவை பரிசோதித்துக் கொள்ளுமாறும் பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
பிரபல அறக்கட்டளையுடன் கூட்டு ஒத்துழைப்பை மேற்கொண்ட நிறுவனமொன்று அந்த Vending Machine முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.