சிரம்பான்,ஆக 6 – சிரம்பானில் ஒரு அமைப்பைச் சேர்ந்த இரண்டு மூத்த அதிகாரிகள் மொத்தம் 14,000 ரிங்கிட் லஞ்சம் கேட்டது மற்றும் அதனை வாங்கியது தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 30 மற்றும் 40 வயதுடைய அந்த இருவரையும் இம்மாதம் 12 ஆம்தேதி வரை ஏழு நாட்களுக்கு தடுத்துவைக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விண்ணப்பத்திற்கு மாஜிஸ்திரேட் Syed Farid Syed Ali அனுமதி வழங்கினார்.
ஒரு நிறுவனத்திற்கு கணினி மற்றும் அலுவலக உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு விநியோகிப்பாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அந்த இருவரும், நேற்று MACC அலுவலகத்தில் வாக்குமூலம் அளிப்பதற்கு அழைக்கப்பட்ட பின்னர் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் சந்தேக நபர்களின் கணக்கில் லஞ்சப் பணம் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் 2009 ஆம் ஆண்டின் MACC சட்டத்தின் பிரிவி 17 (ஏ) வின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக நெகிரி செம்பிலான் MACC இயக்குனர் Awgkok Ahmad Taufik Putra Awg Ismail தெரிவித்தார்.