ஜொகூர் பாரு, நவம்பர் 1 – ஜொகூரிலுள்ள உணவகம் ஒன்றில், உணவருந்திய பின்னர் அதற்கான கட்டடணத்தை செலுத்தாமல் வெளியேறிய நான்கு நபர்களை, உணவக உரிமையாளர் தேடி வருகிறார்.
அக்டோபர் 30-ஆம் தேதி, நண்பகல் மணி 12.39 வாக்கில், ‘Sweet Talk Dessert & Cafe’ உணவகத்தில் அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
உணவருந்தி முடிந்ததும், அவர்கள் 10 காசு கூட செலுத்தாமல் அப்படியே வெளியேறி சென்று விட்டதாக, சம்பந்தப்பட்ட உணவகத்தின் முகநூலில், அதன் உரிமையாளர் பதிவிட்டுள்ளார்.
நூடல் உணவு, நாசி ஆயாம், மூன்று விதமான பலகாரங்கள், ஒரு கோப்பை நீர் ஆகியவற்றை அவர்கள் வாங்கி உண்ட “ரசீதும்” அந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.
“உணவகத்தின் சூழல் மிகவும் சாதகமாக இருந்ததால், அவர்கள் கட்டணத்தை செலுத்தாமல் சென்று விட்டனர். இந்த பதிவை பார்த்தவுடனாவது அவர்கள் முன்வந்து பணத்தை செலுத்துவார்கள் என நம்புகிறேன்” என்று தமது பதிவில் உரிமையாளர் கேலியாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு வந்த இரு பெண்கள், இரு ஆண்கள் என நால்வருடன் பின்னர் அங்கு வந்த மேலும் இரு பெண்கள் அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து உணவருந்தினர்.
இறுதியாக வந்த இரு பெண்கள், உணவகத்தை விட்டு வெளியேறும் போது பணத்தை செலுத்தி விட்டதாகவும், முதலில் வந்த நால்வர் மட்டுமே பணத்தை செலுத்தவில்லை எனவும் உரிமையாளர் தெளிவுப்படுத்தியுள்ளார்.