![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/IMG-20240325-WA0022-780x470.jpg)
கோலாலம்பூர், மார்ச் 25 – சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, டமன்சாராவிலுள்ள, பேரங்காடி ஒன்றின், கார் நிறுத்துமிடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட, ஐந்து லட்சம் ரிங்கிட் பண நோட்டுகள் நிரப்பப்பட்ட “லக்கேஜ்” தங்களுடையது தான் என கூறியுள்ள நிறுவனத்தை, விசாரணைக்கு உதவ முன்வருமாறு போலீஸ் அழைப்பு விடுத்துள்ளது.
அச்சம்பவம் தொடர்பில் அந்நிறுவனம் புகார் செய்திருக்கும் போதும், சாட்சியமளிக்க அவர்கள் இன்னும் வரவில்லை என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் தெரிவித்தார்.
அதனால், அது தொடர்பான விசாரணைக்கு உதவ கூடிய விரைவில், சம்பந்தப்பட்ட நிறுவனம் முன்வர வேண்டுமென ஹுசைன் கேட்டுக் கொண்டார்.
40 வயது மதிக்கத்தக்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குனரை டமன்சாரா போலீஸ் நிலையம், இதற்கு முன் விசாரணைக்காக அழைத்துள்ளது. எனினும், கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும், உடல்நலம் சரியில்லை என கூறி அவர் வாக்குமூலம் அளிக்க வரவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
முன்னதாக, டமன்சாராவிலுள்ள, பேரங்காடி ஒன்றின் கார் நிறுத்துமிடத்திலிருந்து, அந்த பேரங்காடியின் பாதுகாவலர்கள் கண்டெடுத்த பயணப் பையில், 50 மற்றும் 100 ரிங்கிட் பண நோட்டு கட்டுகள் நிரப்பப்பட்டிருந்த வேளை ; அது தங்களுடையது தான் என நிறுவனம் ஒன்று உரிமை கொண்டாடி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.