
கோலாலாம்பூர், ஜூன்-17 – மலேசிய இந்தியச் சமூகத்தின் அரசியல் மற்றும் சமூக எதிர்காலம் குறித்த மிக முக்கியமான ‘தோழர் செல்வராஜூ சுந்தரம் PIO ICON’ பொதுக் கலந்துரையாடல் தொடர், வரும் ஜூன் 20-ஆம் தேதி கோலாலம்பூரில் தடம் பதிக்கிறது.
“மலேசிய இந்தியர்கள் ஒரு திருப்புமுனையில்: அரசியல் பிழைப்பா அல்லது அரசியல் மறுவடிவமைப்பா?” (Malaysian Indians at a Crossroads: Political Survival or Political Reinvention) என்ற தலைப்பில் இந்த முதல் பொதுக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்துலக இந்திய வம்சாவளியினருக்கான அமைப்பான GOPIO நிறுவனரும், சமூகத் தலைவருமான மறைந்த செல்வராஜூ சுந்தரத்தின் நினைவாகவும், அவரின் இலட்சியக் கனவைத் தொடரும் வகையிலும் இந்த நிகழ்வு முதன் முறையாக நடத்தப்படுகிறது.
இதன் நோக்கம் குறித்து GOPIO செயலாளர் ரவீந்திரன் அர்ஜூனன் விவரிக்கிறார்.
இதில் மனித உரிமைகளுக்கான ஆசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் இணைத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சார்ல்ஸ் சாந்தியாகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
இந்தியச் சமூகம் வெறும் அடையாள அரசியலைத் தாண்டி, உண்மையான கொள்கை மாற்றங்களையும், பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டையும் எவ்வாறு அடைய வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனைகளை மையமாகக் கொண்டு இந்த உரை அமையவுள்ளது.
கேள்வி பதில் அங்கமும் உண்டு என்பதால், வருகையாளர்களுக்கு நாட்டு நடப்பு மற்றும் அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து நல்லத் தெளிவுக் கிடைக்குமென ரவீந்திரன் சொன்னார்.
வரும் சனிக்கிழமை, ஜூன் 20, மாலை 4 மணிக்கு, பிரிக்ஃபீல்ட்ஸ், Dua Sentral-லில் உள்ள மராஸ் Maraz Banquet Hall மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்வுக்குப் பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் திரளாக வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



