குவாலா திரங்கானு, ஜனவரி 18 – திரங்கானு, குவாலா திரங்கானு நீதிமன்றத்தில் இன்று வெடிகுண்டு மருட்டல் விடுக்கப்பட்டது.
குவாலா திரங்கானு நீதிமன்ற வளாக வேலிக்கு முன், இன்று அதிகாலை மணி 6.45 வாக்கில் அந்த வெடிகுண்டு வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
காலை மணி 7.30 வாக்கில், வேலைக்கு வந்த நீதிமன்ற பணியாளர்கள், அந்த வெடிகுண்டை கண்டு அதிர்ச்சியடைந்த வேளை ; உடனடியாக போலீசுக்கு தகவல் வழங்கப்பட்டதோடு, நீதிமன்ற கட்டடத்தின் ஒரு பகுதி உடனடியாக காலி செய்யப்பட்டது.
அந்த வெடிகுண்டு மருட்டல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, UPB எனும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர், காலை மணி 7.45 வாக்கில் நீதிமன்ற வளாகம் வந்தடைந்தனர்.
அவர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், “முதல் எச்சரிக்கை” என எழுதப்பட்டிருந்த காகித சுருள் ஒன்றை, சம்பவ இடத்திலிருந்து அவர்கள் கண்டெடுத்தனர்.
அதோடு, காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த ஒளிரும் கை விளக்கு ஒன்றையும், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் அழித்ததாக கூறப்படுகிறது.
அந்த வெடிகுண்டு மருட்டல் தொடர்பில், போலீசார் இன்னும் கருத்துரைக்கவில்லை.
இன்று நண்பகல் மணி 12.40 வரையில், குவாலா திரங்கானு நீதிமன்ற கட்டடத்தின் ஒரு பகுதி தொடர்ந்து மூடப்பட்டிருந்தது.
நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனையிட்ட, வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர், வேறு எந்த ஒரு வெடிகுண்டும் அங்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.