சிரம்பான், மார்ச் 28 – வடக்கு -தெற்கு நெடுஞ்சாலையில் 255ஆவது கிலோமீட்டரில் இரண்டு கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் லோரி ஓட்டுனர் ஒருவர் கருகி மாண்டார். இந்த விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன் ரெம்பாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் 26 உறுப்பினர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றனர். காலியான கொள்கலனை ஏற்றிச் சென்ற ஒரு டிரெய்லர் லோரியும் மற்றொரு லோரியும் விபத்துக்குள்ளான பிறகு அந்த இரண்டு லோரிகளும் 10 மீட்டர் ஆழத்திலுள்ள பள்ளத்தில் விழுந்தன. அவற்றில் கொள்கலன் ஏற்றியிருந்த லோரி தீப்பிடித்து எரிந்ததில் இருக்கையில் சிக்கிக்கொண்ட 30 வயதுடைய ஓட்டுனர் பரிதாபமாக கருகி மாண்டார். தீயணைப்பு படையினரின் உதவியோடு அந்த ஆடவரின் உடல் மீட்கப்பட்டது.