புதுடில்லி, டிச 14 – இந்திய நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் 22 ஆண்டுகளுக்கு முன் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது 8 பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு நேற்று மீண்டும் அங்கு பாதுகாப்பையும் மீறி புகை அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஆறு நபர்கள் பிடிபட்டனர். அறுவர் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மீறலை திட்டமிட்டு செயல்படுத்தியிருப்பதாக போலீஸ் தகவல்கள் தெரிவித்தன.
சாகர் ஷர்மா மற்றும் D. மனோரஞ்சன் ஆகிய இருவர் இந்திய மக்களவைக்குள் மஞ்சள் புகை குப்பிகளை பயன்படுத்தி புகையை ஏற்படுத்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். நீலம் தேவி மற்றும் அமோல் ஷிண்டே ஆகியோர் நாடாளுமன்றத்தின் வெளியே சிவப்பு மற்றும் மஞ்சள் குப்பிகளை வெடித்தனர். ஐந்தாவது நபர் லலிட் ஜா என்பவர் என அடையாளம் கூறப்பட்டது. குர்கானிலுள்ள லலிட் ஜா வீட்டில் அவர்கள் ஐவரும் தங்கியிருந்தனர். குர்கானைச் சேர்ந்த ஆறாவது நபர் விக்கி ஷர்மாவும் கைது செய்யப்பட்டார்.