கோலாலம்பூர். பிப் 29 – தமது அமைச்சரவையில் உறுப்பினர்களில் யார் ஊழலில் சம்பந்தப்பட்டாலும் அவர்கள் பதவிலிருந்து நீக்கப்படுவர். ஊழலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்தார். . லஞ்ச ஊழல் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி MACC க்கு தாம் பணித்திருப்பதாக அவர் கூறினார். ஒரு ஆண்டுக்கு மேலாக நாம் அதிகாரத்தில் இருந்து வருகிறோம். லஞ்ச ஊழலில் அமைச்சர்கள் எவரும் சம்பந்தப்பட்டிருந்தால் சரியான ஆதாரத்தோடு தகவல் வழங்கும்படி நாடாளுமன்றத்தில் மட்டும் அல்ல, நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் தாம் பலரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அப்படி யாரும் இருந்தால் நாங்கள் விசாரணை செய்து அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என அன்வார் கூறினார்.
நாங்கள் அதிகாரத்திற்கு வந்து ஒரு ஆண்டு மூன்று மாதமாகிவிட்டது. ஆனால் அத்தகைய புகார்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. தூய்மையான மற்றும் ஊழலிருந்து விடுபட்ட அரசாங்கம் என்ற தோற்றத்தை நிலைநிறுத்த உதவிய எனது நண்பர்களான அமைச்சர்களை வணங்குகிறேன் என 2024ஆம் ஆண்டிற்கான தேசிய ஊழல் தடுப்பு உச்சநிலை மாநாட்டை தொடக்கிவைத்து உரையாற்றியபோது அன்வார் தெரிவித்தார்.