கோலாலம்பூர், நவ 23 – காஸா முனையில் சுகாதார வசதிகளில் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்திவரும் ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்ரேல் படைகளின் தாக்குதலை மலேசியா கடுமையாக சாடியது. மனிதாபிமானமற்ற இஸ்ரேல் படைகளின் அந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். Perdana Global Peace Foundation (PGPF)னின் மருத்துவ வசதி மற்றும் காஸாவிலுள்ள இந்தோனேசிய மருத்துவமனை மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்தும் மலேசியா கவலை தெரிவித்துள்ளதாக விஸ்மா புத்ரா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மருத்துவ வசதிகளை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் நடத்திவரும் அந்த தாக்குதல்கள் மூலம் 1949ஆம் ஆண்டின் ஜெனிவா உடன்பாட்டை இஸ்ரேல் கண்மூடித்தனமாக மீறிவருவதாக மலேசியா தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனர்களை ஒட்டுமொத்தமாக நிர்மூலமாக்கும் இஸ்ரேல் ராணுவத்தின் முயற்சியாகவும் அந்த நடவடிக்கை இருப்பதாக மலேசியா தெரிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்ரேல் படைகளின் இந்த தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என மலேசியா கோரிக்கை விடுத்துள்ளது. காஸாவில் அதிகரித்துவரும் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகிவரும் மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து அங்கு உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டது.