
கோலாலம்பூர், மே-27 – ஆசிய சுற்றுப் பயணம் மேற்கொண்டு மலேசியா வந்துள்ள மென்சஸ்டர் யுனைட்டெட் அணியின் பிரதிநிதிகளை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சந்தித்தார்.
ஆசியான் உச்ச நிலை மாநாட்டு பரபரப்பிலும், அதற்காக அவர் சிறிது நேரம் ஒதுக்கினார்.
மென்சஸ்டர் யுனைட்டெட் தலைமை செயலதிகாரி ஓமார் பெராடா, தலைமைப் பயிற்றுநர் ரூபன் அமோரிம் ஆகியோருடன், நாளை புக்கிட் ஜாலில் அரங்கில் யுனைட்டெடுடன் மோதும் ஆசியான் ஆல் ஸ்டார்ஸ் பிரதிநிதிகளையும் அன்வார் சந்தித்தார்.
அந்த 20 நிமிட சந்திப்பில் யுனைட்டெட்டின் ஆசியப் பயணம், ஆட்டத்திற்கான தயார் நிலை உள்ளிட்ட விஷயங்களை அன்வார் பேசினார்.
இளைஞர் – விளையாட்டுத் துறை அமைச்சர் ஹானா இயோவும் உடனிருந்தார்.
நினைவுப்பரிசாக மென்சஸ்டர் யுனைட்டெட்டின் ஜேக்கட்டும் பிரதமருக்கு வழங்கப்பட்டது.
கேப்டன் புரூனோ ஃபெர்னாண்டஸ் தலைமையிலான யுனைட்டெட், நாளைய நட்புமுறை ஆட்டத்தில் ஆசியானின் கலப்பு அணியைச் சந்திக்கிறது.
மலேசியா உள்ளிட்ட ஆசியான் நாடுகளின் ஆட்டக்காரர்கள் அதில் களமிறங்குவர்.
இவ்வேவையில், நாளைய ஆட்டத்தில் யாருக்கு தமது ஆதரவு என்பதை தாம் இன்னும் முடிவுச் செய்யவில்லை என, மென்சஸ்டர் யுனைட்டெட்டின் தீவிர ஆதரவாளரான டத்தோ ஸ்ரீ.
அன்வார் நகைச்சுவையாகக் கூறினார்.
சுமார் 60,000 இரசிகர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படும் அவ்வாட்டத்தை, மலேசியா வந்துள்ள ஆசியான் தலைவர்கள் சிலரும் நேரில் கண்டு களிப்பர்.