கோலாலம்பூர், பிப் 1 – இன்று நடைமுறைக்கு வந்துள்ள நீர் கட்டண மாற்றங்களுக்கு ஏற்ப மாநிலங்களில் நீர் வினியோகிப்பு வழங்குவோர் தரமான சேவையை வழங்கும் பொருட்டு அவர்களை SPAN எனப்படும் தேசிய நீர் சேவைகளின் வாரியம் ஒழுங்குபடுத்தும் என அதன் தலைவரான சார்ல்ஸ் சண்டியாகோ தெரிவித்திருக்கிறார். நீர் விநியோகிப்பாளர்கள் நிதிக் கட்டுப்பாடுகளை மோசமான சேவைத் தரத்திற்கு காரணமாக கூறுவதற்கு இனியும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வணிகத் திட்டத்தில் உள்ள சிக்கல்களை நாங்கள் கண்டறிந்த போதெல்லாம், தேவையான மாற்றங்களை செயல்படுத்த அவர்களிடம் நிதி இல்லை என்று பதில் அளிக்கப்பட்டது. இப்போது சேவையை மேம்படுத்தினால் அது தொடர்பான மேம்பாடுகளை காணமுடியும் . அதுதான் SPAN-னின் வாக்குறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
நீர் விநியோகிப்பு சேவையை வழங்கும் தரப்பினர் தங்கள் சேவைகளை மேம்படுத்தும்படி தாம் தொடர்ந்து தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதையும் சார்ல்ஸ் சண்டியாகோ சுட்டிக்காட்டினார். ஆனால், நிதி பற்றாக்குறையால் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவானில் சராசரி உள்நாட்டு நீர் கட்டண விகிதங்களை ஒரு கன மீட்டருக்கு 22 சென் என தரப்படுத்துவதற்கான உறுதிமொழியை அரசாங்கம் இப்போது நிறைவேற்றியுள்ளது . நீர் கட்டண மறுசீரமைப்பு ஜனவரி 17ஆம் தேதியன்று Span அறிவித்தது. அனைத்து மாநில அரசுகளும் விடுத்த கோரிக்கைகளை அடுத்து புத்ராஜெயா திருத்தப்பட்ட கட்டணத்தை ஏற்றுக்கொண்டதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் விளக்கம் அளித்திருந்ததையும் சார்ல்ஸ் சண்டியாகோ தெரிவித்தார்.