லுமுட், ஜனவரி 17 – பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ங்கே கூ ஹாம்மின் கார்கள் எரியூட்டபட்ட சம்பவம் தொடர்பில், விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க ஆடவன் ஒருவன், இன்று போலீஸ் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டான்.
அச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை நேற்று பேராக் மாநில அரசாங்க தரப்பு இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக, மஞ்சோங் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் நோர்டின் அப்துல்லா தெரிவித்தார்.
அவ்வாடவனை, இன்று போலீஸ் உத்தரவாததின் பேரில் விடுவிக்குமாறும், தேவை ஏற்பட்டால், அரசாங்க தரப்பு சாட்சியமாக அவனை அழைக்குமாறும், தமது தரப்பு பணிக்கப்பட்டுள்ளதாக, நோர்டின் சொன்னார்.
இம்மாதம் 12-ஆம் தேதி, சிலாங்கூர், ஷா ஆலாமில் கைதுச் செய்யப்பட்ட அவ்வாடவன், இன்று வரை ஆறு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தான்.
முன்னதாக, பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ங்கே கூ ஹாமின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்களுக்கு எரியூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அது ஒரு சதிநாசச் செயல் என்பது போலீஸ் விசாரணையில் பின்னர் தெரிய வந்ததும் குறிப்பிடத்தக்கது.