ஈப்போ , நவ 16 – பேராவில் தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள தாமான் மேரு 2B மற்றும் 2C ஆகிய குடியிருப்பு பகுதிகளில் கடும் மழையுடன் புயல் வீசியதில் 85 வீடுகளின் கூரைகள் பறந்தன. மழைநீர் திடீரென வீட்டிற்குள் புகுந்ததால் வீடுகளில் உள்ள பொருட்களும் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகின. பாதிக்கப்பட்ட வீடுகளில் இந்தியர்களுக்கு சொந்தமான வீடுகளும் அடங்கும் . தீபாவளிக்கு மறுநாள் ஏற்பட்ட இந்த சம்பவத்தினால் தீபாவளியை கொண்டாடிய இந்துக்கள் பெரும் கவலைக்கும் சிரமத்திற்கும் உள்ளாகினர்.
மாலை மணி 5.30 அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தபோது வீட்டில் தனியாக இருந்ததாவும் என்ன செய்வது என்று தெரியாமல் அச்சத்திற்கு உள்ளானதாகவும் அங்குள்ள குடியிருப்புவாசிகள் வேதனையுடன் கூறினர். இந்த வட்டாரத்தில் அடிக்கடி இந்த சம்பவம் நிகழ்வதாகவும் இந்த முறை பாதிப்பு மிகவும் மோசமாக இருந்ததாகவும் அவர்கள் விளக்கினர்.
இந்த வீடமைப்புப் பகுதி தம்புன் நாடாளுமன்றத் தொகுதிற்கு உப்பட்டுள்ளதால் அதன் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பாதிக்கபட்ட மக்களுக்கு விரைவான உதவி கிடைப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவார் என்று பொது மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.