கோலாலம்பூர், டிச 13 – சரவாவில் தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு நடவடிக்கை முழுமையடைந்தவுடன் சரவா மாநிலம் கூடுதலாக 12 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டிருக்கும். விரைவில் சபா மற்றும் சரவா மாநிலங்களுக்கான நாடாளுமன்ற தொகுதிகள் அதிகரிக்கும் என சரவா ஜி.பி.எஸ் ‘GPS’ கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
சரவா மாநிலம் மட்டும் குறைந்தபட்சம் கூடுதலாக 12 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டிருக்கும். புதிய நாடாளுமன்ற தொகுதிகள் குறித்த பரிந்துரைக்கான செயல்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஜி.பி.எஸ் ஆராய்ந்து வருவதாக கூறப்பட்டது.
1963ஆம் ஆண்டின் மலேசிய உடன்பாட்டின் கீழ் நாட்டின் மொத்த நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி எண்ணிக்கையை சபா மற்றும் சரவா மாநிலங்கள் கொண்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவ்விரண்டு மாநிலங்களும் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றன.