கோலாலம்பூர், பிப் 2 – சொத்து வாங்குவதாக நம்பி 57 வயதுடைய ஓய்வு பெற்ற பெண் ஒருவர் 460,000 ரிங்கிட்டை இழந்தார். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியை சொத்து வாங்குவது தொடர்பில் நேருக்கு நேர் சந்தித்து அது தொடர்பாக ஆறு முறை வங்கிகளில் பணப்பட்டுவாடா செய்ததோடு ரொக்கப் பணத்தையும் அந்த சந்தேகப் பேர்வழியிடம் இழந்ததாக சிரம்பான் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமது ஹட்டா சே டின் தெரிவித்தார். இரண்டு மாதங்களுக்குள் சொத்து கொள்முதல் அனைத்தும் முடிந்தவுடன் சொத்துடமை அந்த பெண்ணின் கைக்கு வந்துவிடும் என்றும் அந்த சந்தேகப் பேர்வழி உறுதியளித்திருக்கிறார்.
இரண்டு மாதங்களுக்கு பின் சம்பந்தப்பட்ட அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போதுதான் தாம் ஏமாந்துவிட்டதை உணர்ந்து அந்த பெண் போலீசில் புகார் செய்ததாக ACP முகமது ஹட்டா தெரிவித்தார். பெரிய அளவிலான தொகை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.