Latestமலேசியா

சிறையில் அன்வாருக்கு சிறப்பு பிரமுகர் அறையா? மறுக்கிறது சிறைத்துறை

கோலாலம்பூர், டிச 5 – முன்னாள் கைதி என கூறிக்கொண்ட ஒருவர் தான் சிறையில் இருந்தபோது டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு சிறப்பு பிரமுகர் அறை ஒன்று இருந்ததாகவும் அதை தன்னை சுத்தம் செய்யுமாறு அன்வார் கேட்டுக் கொண்டதாகவும் வெளியாகியுள்ள பேட்டி தொடர்பில் சிறைத்துறை மறுப்பு தெரிவித்திருக்கிறது.

அபாங் மாட் (Abang Mat) என பெயர்க்கொண்ட அந்த நபரின் கூற்றை மறுத்த சிறைத்துறை எந்த சிறையிலும் சிறப்பு பிரமுகர் அறை இல்லை என கூறியுள்ளது.

அன்வார் உடல்நிலை காரணமாக சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையில் சுங்கை பூலோ சிறைச்சாலையின் கிளினிக்கில் வைக்கப்பட்டிருந்தாக அத்துறை தெரிவித்தது.

ஆரோக்கிய பிரச்சனைக் கொண்ட எந்த சிறைக் கைதிக்கும் அதுபோன்ற கவனிப்பு வழங்கப்படும் என அது கூறியது.

அதே சமயத்தில் வேறு சிறை கட்டிடத்தில் உள்ள ஒரு கைதி இன்னொரு கட்டிடத்தில் உள்ள அறையையோ கிளினிக்கையோ சுத்தம் செய்ய அனுமதிக்கப்பட்டதில்லை என அது தெரிவித்தது.

இதனிடையே, சிறைச்சாலையின் கிளினிக்கில் அன்வாரின் அறையை தான் காண முடிந்ததாக அபாங் மாட் தெரிவித்த கருத்தையும் அது மறுத்தது.

அன்வார் 2015 தொடங்கி 2018 வரை சுங்கை பூலோ சிறையில் ஓரினச் சேர்க்கை குற்றத்திற்காக சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2018ல் அரச மன்னிப்பு கிடைத்ததன் வழி அவர் அங்கிருந்து விடுதலையானார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!