
கோலா திரெங்கானு – மே 29 – வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் இடங்களில் சோதனை நடத்துவதற்கு மாநில குடிநுழைவுத் துறைக்கு வாராண்ட் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் சோதனைகள் நடத்துவதற்கும் , ஆவணங்களை சரிபார்க்கவும், சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் பெறவும் அமலாக்க அதிகாரிகள் நடத்தும் வழக்கமான நடவடிக்கைகளாக அந்த சோதனைகள் அமைவதாக திரெங்கானு மாநில குடிநுழைவு இயக்குநர் முகமட் யூஸ்ரி முகமட் நோர் கூறினார்.
அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் செல்லுபடியாகும் ஆவணங்களை வைத்திருந்து, எந்த சட்டங்களையும் மீறவில்லை என்றால், குடிநுழைவு அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளை வர்த்தக உரிமையாளர்களும் தொழிற்சாலை நடத்துபவர்களும் மறுக்கக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.
நிர்வாகத்தின் அனுமதியில்லாமல் குடிநுழைவுத் துறையின் அமலாக்கக் குழுவை வளாகத்திற்குள் நுழைய அனுமதித்ததற்காக தொழிற்சாலை மேற்பார்வையாளர் ஒருவர் பாதுகாவலரைக் கண்டித்த சம்பவத்திற்கு முகமட் யுஸ்ரின் பதிலளித்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய ஏழு மணி நேர நடவடிக்கையில், மூன்று தொழிற்சாலைகளில் பணிபுரியும் 212 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 593 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளைத் தொடர்ந்து 24 முதல் 37 வயதுக்குட்பட்ட ஏழு வெளிநாட்டினர் தங்கள் பாஸ்கள் அல்லது அனுமதிச் சீட்டுகளை தவறாகப் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.