ஒடிசா, ஜன 10 – ஒடிசா மாநிலத்தில் தனித்துவமாக, சிவப்பு எறும்புகள் கொண்டு சமைக்கப்படும் சட்னிக்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்கு புவிசார் குறியீடு வழங்கப்படும்.
இந்நிலையில் இந்தியாவின் மத்திய அரசு, ஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
ஆம், நீங்க கேட்டது சரிதான். அது எறும்பு சட்னி தான்! நம்மைப் பொறுத்தவரை எறும்புகளைக் கண்டால் ஓடுவோம் அல்லது சாகடிப்போம். ஆனால் பழங்குடியினர் சிவப்பு எறும்புகளையும் அதன் முட்டைகளையும் சேகரித்து, உப்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து அரைத்து சட்னியாகச் சாப்பிடுகிறார்கள்.
இந்த சட்னி உடலுக்கு நல்ல மருந்தாகச் செயல்படுகிறது. புரதம், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை கொண்டுள்ள இந்த சட்னி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. மருத்துவ ரீதியாகவும் பயனுள்ளதாக இருக்கின்ற நிலையில், இந்த எறும்பு சட்னிக்கு தற்போது புவிசார் குறியீடு ‘GI tag’ கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.