
இஸ்கண்டார் புத்ரி, ஜூன்-18 – ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் உள்ள வீட்டில் கடந்த வியாழக்கிழமை சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆசிரியையை, கடந்தாண்டு செப்டம்பரிலிருந்து தொடர்புகொள்ள இயலவில்லை.
கல்வி மற்றும் தகவல் துறைக்கான ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் அஸ்னான் தாமின் அதனை உறுதிப்படுத்தினார்.
39 வயது Lo Kwan Fong, ஆகக் கடைசியாக செப்டம்பர் 26-ஆம் தேதி தனது பள்ளியைத் தொடர்புகொண்டுள்ளார்.
அதன் பிறகு வாட்சப், டெலிகிராம், மெசெஞ்சர் அல்லது எஸ்.எம்.எஸ் குறுந்தகவல் வாயிலாகவோ அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
இதையடுத்து, அவருக்கு பள்ளித் தலைமையாசிரியர் நவம்பர் 21, டிசம்பர் 19 ஆகிய இரு தேதிகளில் காரணம் கோரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இவ்வாண்டு மார்ச் வரையிலும் அவரைத் தொடர்கொள்ள முடியாமல் போகவே, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ, சிறைச்சாலை துறை, குடிநுழைவுத் துறை, தேசிய பதிவிலாக போன்றவற்றை தொடர்புகொண்டது உட்பட பள்ளி நிர்வாகம் வேறு வழிகளைக் கையாண்டதாக அஸ்னான் கூறினார்.
தாமான் துங்கு அமீனா பள்ளி ஆசிரியையான Loh, Bandar Selesa Jaya-வில் கடந்த வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக சந்தேகத்தில் பக்கத்து வீட்டுக்காரர் போலீஸுக்கு தகவல் கொடுக்க, சடலம் மீட்கப்பட்டது.
அவர் இறந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியிருக்கலாம் என்பதால், மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என, இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் எம் குமராசன் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.