ஜாசின், டிச 6 – மர வேலைப்பாடு நிறுவனத்தைச் சேர்ந்த திருமணம் ஆன தம்பதியர் முகநூலில் வெளிவந்த முதலீட்டுத் திட்டத்தை நம்பி 1.6 மில்லியன் ரிங்கிட் இழந்தனர்.
அந்த முதலீட்டுத் திட்டத்தில் இந்த தம்பதியர் ஆர்வம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்களை மூவர் வெவ்வேறு தொலைபேசி எண்களிலிருந்து தொடர்பு கொண்டு இந்த மோசடியை செய்திருப்பதாக ஜாசின் போலீஸ் தலைவர் அஹ்மாட் ஜாமில் ரட்சி தெரிவித்தார்.
பங்கு முதலீடுகளுக்காக பணத்தை பரிமாற்றும் செய்யும்படி அந்த தம்பதியர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து 19 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு அவர்கள் 1.6 மில்லியன் ரிங்கிட் கட்டம் கட்டமான பட்டுவாடா செய்துள்ளனர்.
தொடக்கத்தில் அந்த தம்பதியர் 277,148 ரிங்கிட்டை வருமானமாக பெற்றதோடு இந்த காலக்கட்டத்தில் சந்தேகத்திற்குரிய பொதுப் பங்கிற்கான சான்றிதழை எழுத்து பிழைகளுடன் சீனாவிலிருந்து பெற்றதை தொடர்ந்து ஏற்பட்ட சந்தேகத்தினால் அந்த தம்பதியர் தாங்கள் ஏமாந்துவிட்டதை உணர்ந்து நவம்பர் 30ஆம் தேதி மாலை மணி 6.46 அளவில் போலீசில் புகார் செய்தனர் என அஹ்மாட் ஜாமில் ரட்சி கூறினார்.