Latestமலேசியா

ஜோகூர் தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையிலான காணொலி தயாரிக்கும் போட்டி; நியோர் தமிழ்ப்பள்ளி வாகை

ஸ்கூடாய், மே-25 – தமிழ்ப் பள்ளிகளிள் அடைவுநிலையை மேம்படுத்திக் காட்டுவதிலும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி பிற தனித் திறமைகளை வளர்த்துக் கொள்வதிலும் பல்வேறு பொது அமைப்புகள் தொடர்ந்து முனைப்புக் காட்டி வருகின்றன.

ஆங்காங்கே நல்ல பல திட்டங்களும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருவதை நாம் காண்கிறோம்.

அவ்வகையில் ஜோகூர் தமிழ்க் கல்வியாளர் சமூகநல மேம்பாட்டு இயக்கம் கடந்தாண்டு இறுதியில் ஜோகூர் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கிடையில் காணொலிப் போட்டியொன்றை நடத்தியது.

‘தரமிக்கக் கல்வி தருவிக்கும் தமிழ்ப்பள்ளி’ எனும் கருப்பொருளோடு இந்தப் போட்டி நடத்தப்பட்டது.

அதன் வெற்றி விழா அண்மையில் ஸ்கூடாய், இஸ்கண்டார் புத்ரி நகராண்மை கழகத்தின் பல்நோக்கு மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

ஜோகூர் மாநில கல்வி இலாகாவும் மாநிலத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகமும் ஜோகூர் தமிழ்க்கல்வியாளர் சமூகநல மேம்பாட்டு இயக்கமும் இணைந்து இவ்விழாவை வெற்றிக்கரமாக நடத்தின.

ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினரும் ஜொகூர் மாநில ம.இ.கா தலைவருமான இரவீன்குமார் கிருஷ்ணசாமி, ஜோகூர் கல்வி இலாகாவிலிருந்து தமிழ்ப்பள்ளி மற்றும் பாலர்பள்ளி உதவி இயக்குநருமான தமிழொளி இரவிசந்திரன் இராமசந்திரனும் சிறப்பு வருகையளித்தனர்.

காணொலிப் போட்டியில் ஜோகூர் மாநிலத்திலுள்ள 71 தமிழ்ப்பள்ளிகளும் கலந்து கொண்டன.

முதல் நிலையில் நியோர் தமிழ்ப்பள்ளி, இரண்டாம் நிலையில் ச்சா’ஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளி, மூன்றாம் நிலையில் பெக்கோ தோட்டத் தமிழ்ப்பள்ளியும் வாகை சூடின.

போட்டிக்கு வந்த 71 காணொலிகளில் மிக அதிகமானோர் பார்த்த காணொலியாக கோத்தா திங்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஜாலான் தாஜூல் தமிழ்ப்பள்ளியின் காணொலி தேர்ந்தெடுக்கப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு அம்சமாக ‘தமிழ்ப்பள்ளியே நம் அடையாளம்’ எனும் மலரும் இம்முழக்கவரியைக் கொண்ட கார் ஸ்டிக்கரும் வெளியீடு கண்டன.

இந்நூலில் ஜொகூர் மாநிலத்திலுள்ள 71 தமிழ்ப்பள்ளிகளின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியுள்ளன.

மேலும், தமிழ்மொழி மற்றும் தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளும் புள்ளிவிவரங்களும் இடம் பெற்றுள்ளன.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!