பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 28 – நாட்டின் கடப்பிதழை தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு பயன்படுத்தும் பரிந்துரையை, குடிநுழைவுத் துறை பணியாளர்களுக்கான தொழிற்சங்கம் முன் வைத்துள்ளது.
தற்சமயம், மலேசிய கடப்பிதழை அதிகபட்சம் ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
கடப்பிதழை பத்தாண்டுகள் வரை பயன்படுத்தும் பரிந்துரை அமலுக்கு வந்தால், குடிநுழைவுத் துறை அதிகாரிகளின் பணிச் சுமையையும், அழுத்தத்தையும் குறைக்க முடியும் என்பதோடு, குடிநுழைவுத் துறை அலுவலகங்களில் கடப்பிதழை பெற்றுக் கொள்வதற்காக காத்திருக்கும் நேரத்தையும் குறைக்க முடியுமென, குடிநுழைவுத் துறை பணியாளர்களுக்கான தொழிற்சங்கத் தலைவர் அஜீத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் கடப்பிதழ்களின் கையேடுகளை தொடர்ந்து பயன்படுத்தலாம். எனினும், அது காலாவதியாகும் காலம் மட்டும் நீட்டிக்கப்பட வேண்டுமென அஜீத் குறிப்பிட்டார்.
மூன்றாம் உலக நாடுகள் சில உட்பட நூற்றுக்கும் அதிகமான உலக நாடுகளில், அதிகபட்சம் பத்தாண்டுகள் வரையில் ஒரு கடப்பிதழை பயன்படுத்தும் முறை அமலில் இருப்பதையும் அஜீத் சுட்டிக் காட்டியுள்ளார்.