கோலா பெர்லிஸ், மார்ச் 16 – கோலா பெர்லீஸ் கம்போங் செபரங் அலோரில் நேற்று மாலை மணி 5 .15 அளவில் இரண்டு வீடுகள் தீப்பிடித்ததில் ஐந்து வயது சிறுவன் தீக்காயங்களுக்கு உள்ளானான்.
உடலின் பல பாகங்களில் 30 விழுக்காடு தீக்காயங்களுக்கு உள்ளான அந்த சிறுவன் சிகிச்சைக்காக துவாங்கு பௌசியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
தீ விபத்துக்குள்ளான வீட்டில் காயம் அடைந்த சிறுவன் உட்பட மூன்று சிறார்கள் இருந்தனர். மற்றொரு வீட்டில் யாரும் குடியிருக்கவில்லை என கூறப்பட்டது.
அங்கிருந்த ஒரு வீட்டிலிருந்து தீ பரவியதில் அந்த இரண்டு வீடுகள் பெரிய அளவில் சேதம் அடைந்தன.
இத்தீவிபத்தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பெர்லீஸ் தீயணைப்பு மீட்புத்துறையின் நடவடிக்கை அதிகாரி சூப்பிரடண்டன் நோரஸ்வான் ஹாஷிம் தெரிவித்தார்.