கோலாலம்பூர், ஜன 1 – மகாகவி பாரதியாரின் 141ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மலேசிய பாரதி தமிழ் மன்றமும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து நடத்தும் கலைவிழா வரும் ஜனவரி 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வருடம் இவரின் பிறந்தநாள் விழாவில் 20 அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளதாக மலேசிய பாரதி தமிழ் மன்றத்தின் தலைவர் ஆர். தியாகராஜன் தெரிவித்தார்.
பாரதியின் வீறுமிக்கக் கருத்துகள் இளைய தலைமுறையினருக்குக் முறையாகக் கடத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மலாயாப் பல்கலைக்கழக இந்தியல் ஆய்வில் துறையின் தலைவர் முனைவர் கோவி.சிவபாலன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
பாட்டுக்கொரு புலவனாய் விடுதலை வேட்கையை மண்ணில் விதைத்த மகாகவி சுப்பிரமணிய பாரதியை நினைவுக்கூர்ந்து இலவசமாக நடைபெறும் இந்த கலைநிகழ்ச்சிக்கு பொதுமக்களும் மாணவர்களும் திரளாக வந்து கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.