சவூதி லீக்: ஆபாச சைகையால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரொனால்டோ
ஜெடார, பிப்ரவரி 26 – சவூதி அரேபிய புரோ லீக் காற்பந்தாட்டத்தின் நேற்றைய ஆட்டத்திற்குப் பிறகு ஆபாச சைகைக் காட்டியதால் கிறிஸ்தியானோ ரொனால்டோ கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.
அவ்வாட்டத்தில் ரொனால்டோவின் ‘Al Nassr’ அணி, உபசரணை அணியான ‘Al Shahab’-பை 3-2 என தோற்கடித்தது. அம்மூன்று கோல்களில் முதல் கோல் பெனால்டி வழி ரொனால்டோ போட்டதாகும்.
ஆட்டம் முடிந்து நடுவர் விசிலை ஊதியதும், வெற்றிக் களிப்பில் இருந்த ரொனால்டோ, எதிரணி ரசிகர்களை நோக்கி ஆபாச சைகைப் புரிந்து, அவர்களை முகம் சுளிக்க வைத்தார்.
எனினும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரொனால்டோவின் ரசிகர்கள் அவரின் அச்செயலை இரசிக்கவில்லை.
சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்கள் அவரை ‘வறுத்தெடுத்து’ வருகின்றனர்.
உலகின் மிகச் சிறந்த கால்பந்து ஆட்டக்காரர்களில் ஒருவராக கருதப்படும் அந்தஸ்தில் இருப்பவருக்கு அது அழகல்ல என அவர்கள் குறிப்பிட்டனர்.
ரொனால்டோவின் அச்செயல் குறித்து பெரியளவில் செய்தி வெளியிட்டுள்ள சவூதி அரேபிய பத்திரிகைகள், அந்நாட்டு கால்பந்து சங்கம் அது குறித்து விசாரணை நடத்தி, அவருக்கு தண்டனைக் கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கின்றன.
‘கால்பந்து லீக்கின் கட்டொழுங்கு வாரியத்துக்கு இது ஒரு மிகப் பெரிய சவால். பொறுத்திருந்து பாருங்கள்’ என சவூதி அரேபியாவின் முன்னணி தொலைக்காட்சி வர்ணனையாளரும் விளையாட்டு எழுத்தாளருமான வாலீட் டிவிட்டரில் விமர்சனம் செய்திருக்கிறார்.
“ நீங்கள் எவ்வளவுப் பெரிய ஆளாக வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு; இது முதன்மை லீக் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ என்ற வாசகத்துடன் அவர் ரொனால்டோவை மறைமுகமாகச் சாடியுள்ளார்.
எனினும், ரொனால்டோவின் இப்புதிய சர்ச்சை குறித்து அவரின் ‘Al Nassr’ அணி நிர்வாகம் இன்னும் வாய்த் திறக்கவில்லை.