
கோலாலம்பூர், மே-7, சீன நாட்டவர்களுக்கு மலேசியா வழங்கும் 90-நாள் விசா விலக்குச் சலுகையை, சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் தற்காத்துப் பேசியுள்ளார்.
பொருளாதாரத்தை உந்தச் செய்யும் அத்தகையக் கொள்கையை வலுப்படுத்த வேண்டுமே ஒழிய, வீம்புக்காக கைவிடுவது விவேகமல்ல என்றார் அவர்.
இந்த விசா விலக்குச் சலுகையை சிலர் தவறாகப் பயன்படுத்தி சட்டப்பூர்வமற்ற தொழில்களில் ஈடுபட முயற்சி செய்யலாம்.
ஆனால் அதை மட்டுமே வைத்து அக்கொள்கையை எடைபோடக் கூடாது என, facebook பதிவில் அவர் தெரிவித்தார்
சீன நாட்டவர்களுக்கான பயண வசதிகள் மேம்பட்டுள்ளதால், உள்ளூர் தொழில்முனைவர்களுக்கு ஏராளமான தொழில் வாய்ப்புகளும் வாடிக்கையாளர் அதிகரிப்பும் வாய்த்துள்ளன.
F&B எனப்படும் உணவுகள் மற்றும் பானங்கள் தொழில், விருந்தோம்பல் சேவை, தங்குமிடம் மற்றும் சேவைத் துறைகளும் இதனால் நன்மையடைந்துள்ளன.
எனவே, இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக அரசாங்கக் கொள்கைகளைச் சாடுவதை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
சீன பிரஜைகளுக்கான இந்த 90-நாள் விசா விலக்களிப்பு சீன அதிபர் சீ சின் பிங்கின் அண்மைய மலேசிய வருகையின் போது இறுதிச் செய்யப்பட்டது.
அதே சலுகையை மலேசியர்களும் வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த பரஸ்பர விசா விலக்களிப்புக்கான நடைமுறைகளை இரு நாடுகளும் தற்போது இறுதிச் செய்து வருகின்றன