
கோலால திரெங்கானு, ஜூன் 6 – Hari Raya Aidil Adha வை முன்னிட்டு திரெங்கானு சாலை போக்குவரத்து துறையான JPJ மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் 8 ஆடம்பர வாகனங்கள் உட்பட 25 வாகனங்களும் சரக்கு லோரி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன உரிமம் மற்றும் காப்புறுதி இல்லாமல் வாகனங்கள் ஓட்டியது மற்றும் இதர சில போக்குவரத்து விதிகள் மீறப்பட்டதன் தொடர்பில் இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக திரெங்கானு சாலை போக்குவரத்துத் துறையின் இயக்குனர் முகமட் ஷம்ரி சமியோன் ( Mohd Zamri Samion ) தெரிவித்தார்.
புதன்கிழமை தொடங்கி இரண்டு நாட்கள் மேற்கொண்ட அந்த நடவடிக்கையின்போது பாதுகாப்பற்ற டயர்களுடன் நைட்ரோஜன் திரவத்தை ஏற்றிச் சென்ற சரக்கு லோரியும் பறிமுதல் செய்யப்பட்டது. 30 வயதுடைய அந்த லோரி ஓட்டுனர் கோலா நெருஸ், கம்போங் பாடாங் நெனாசில் காலை மணி 7,20 அளவில் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் Hummer, Peugeot, Land Rover ஆகியவற்றுடன் உயர் இயந்திர ஆற்றலைக் கொண்ட மோட்டார்சைக்கிளும் அடங்கும். இந்த நடவடிக்கையின்போது 6,006 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்தோடு பல்வேறு குற்றங்களுக்காக 529 வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு 746 சம்மன்கள் வழங்கப்பட்டதாக முகமட் ஷம்ரி கூறினார்.