புத்ராஜெயா, மார்ச் 21 – ஏழாண்டுகளுக்கு முன், டாருல் குர்ஆன் சமயப் பள்ளி தீச்சம்பவத்தில், 23 பேர் உயிரிழக்க காரணமான 22 வயது இளைஞனின் இறுதி மேல்முறையீட்டை, கூட்டரசு நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
அவ்வழக்கின் முதல் குற்றவாளியான, அந்த இளைஞனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிலைநிறுத்தப்படுவதாக, தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு ஒருமனதாக தீர்ப்பளித்தது.
கடந்தாண்டு, பேரரசர் அனுமதிக்கும் வரையில், அந்த இளைஞன் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமென, மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அந்த முடிவை எதிர்த்து அவன் கூட்டரசு நீதிமன்றத்திடம் மேல் முறையீடு செய்திருந்தான்.
சம்பந்தப்பட்ட பள்ளியில் தீ மூழ்வதற்கு அந்த இளைஞனே காரணம், அதோடு தனது செயல் பிறக்கு ஆபத்தை விளைவிக்கும் என தெரிந்தே அவன் அதனை செய்துள்ளான் என்பதால், அவனுக்கான சிறைத் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிலைநிறுத்தி இருந்தது.
2017-ஆம் ஆண்டு, செப்டம்பர் 14-ஆம் தேதி நிகழ்ந்த அந்த கொடூர தீச் சம்பவத்தில் 23 பேர் கருகி மாண்ட வேளை ; சம்பவத்தின் போது, அந்த இளைஞனுக்கு 16 வயது மட்டுமே என்பதால், அவனுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது, அதனால் பேரரசர் அனுமதிக்கும் வரையில் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.