கோலாலம்பூர், நவ 8 – 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சட்டவிரோத நடவடிக்கைகளை நடத்தி வரும் டத்தோ விருது பெற்ற உள்நாட்டு தொழிலதிபர் ஒருவருக்கு எதிராக 1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடியை அம்பலப்படுத்த பாதிக்கப்பட்டவர்களில் பலர் முன்வந்துள்ளனர். அந்த டத்தோவால் முன்மொழியப்பட்ட கடன் வழங்குபவர்களிடம் பணத்தை முதலீடு செய்வதற்கு அதிக வருமானத்தை உறுதியளிக்கும் திட்டத்தில் தாம் பாதிக்கப்பட்டதாக அழகுசாதன பொருட்கள் தொழிலில் சம்பந்தப்பட்ட தொழில் அதிபரான
ஷா அப்துல் மாலேக் தெரிவித்தார். நிறுவனங்களில் முதலீடு செய்ய வாய்ப்புள்ள முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில், அவர் வற்புறுத்தும் வழிகளையும் மற்றும் செல்வாக்கு மிக்க கட்சிகளின் பெயர்களை குறிப்பிடுவது உட்பட பல்வேறு பல தந்திரங்களையும் அந்த டத்தோ பிரமுகர் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
“எனது 5 மில்லியன் ரிங்கிட் முதலீட்டில் இருந்து முதலீட்டு வருமானத்தை ஆறு மாதங்களுக்குள் ஐந்து சதவிகிதம் தருவதாக அவர் உறுதியளித்தார். ஆனால் பின்னர் எதுவும் நடக்கவில்லை என்று ஷா அப்துல் மாலேக் வேதனையோடு தெரிவித்தார். நாங்கள் கேட்கும்பபோதெல்லாம் நிறுவனத்தால் வருமானத்தை வழங்க முடியவில்லை என்றதோடு இறுதியில் எங்களுக்கு எதுவும் இல்லை என்று கைவிரித்து விட்டார். அதோடு நாங்கள் செய்த முதலீடுகளில் இருந்து வரி ஏய்ப்பு செய்ததற்காக உள்நாட்டு வருமான வரி வாரியத்திற்கு புகார் செய்யப்போவதாகவும் அவர் மிரட்டியதாக ஷா அப்துல் மாலேக் தெரிவித்தார். அதோடு அந்த டத்தோ பிரமுகரின் நடவடிக்கையால் தாம் திவாலகிவிட்டதாகவும் ஷா அப்துல் மாலேக் கூறினார். அந்த டத்தோ பிரமுகரின் முதலீட்டு வலையில் சிக்கி பணத்தை இழந்தவர்களில் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலரும் அடங்குவர் என செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக பெட்டாலிங் ஜெயாவிலுள்ள போலீஸ் நிலையத்தில் இரண்டு புகார்களும் செய்யப்பட்டுள்ளன.