சென்னை, மார்ச் 23 – பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார், வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
தமிழகத்தின் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் அவர் பாரதீய ஜனதா கட்சியின் ( BJP ) வேட்பாளராகிறார்.
தனது கணவரும் அரசியல்வாதியுமான சரத்குமார் இந்திய சமத்துவ மக்கள் கட்சியை BJP-யுடன் இணைத்த 2 வாரங்களிலேயே ராதிகாவுக்கு இந்த jackpot அடித்துள்ளது.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால், ராதிகாவுடன் விருதுநகரில் களம் காணப் போவது, மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர்.
தேமுதிக கட்சியின் வேட்பாளராக விருதுநகரில் விஜயகாந்தின் மகன் போட்டியிடுகிறார்.
ராதிகா vs கேப்டன் மகன் என போட்டி உருவாகி, நட்சத்திர தொகுதியாக விருதுநகர் மாறியிருக்கிறது.
இவ்வேளையில், சரத்குமார் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நடிகை ரோஜா, அமைச்சராகி ஆந்திர மாநில அரசியலைக் கலக்கி வரும் நிலையில், ராதிகாவும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று, MP-யாக புதிய அவதாரம் எடுப்பாரா இல்லையா என்பது ஜூன் மாதம் தெரிய வரும்.