கோலாலம்பூர், பிப் 8 – மித்ராவின் நிதியை அதிகரிக்க வேண்டும் என்று தாம் மேற்கொண்ட முயற்சியை அதன் புதிய தலைவரான பி. பிரபாகரன் தொடர வேண்டும் என தொழில் முனைவர் மேம்பாடு , கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் இந்திய சமூகம் மித்ரா மீது வைத்திருக்கும் எதிர்ப்பார்ப்பை நிச்சயம் நன்கு அறிந்திருப்பார் என்பதில் எந்தவோரு சந்தேகமும் இல்லை. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம் மீது நம்பிக்கை வைத்து மித்ரா சிறப்பு பணிக்குழு தலைவராக நியமித்தபோது அந்த பொறுப்பை உணர்ந்து ஒரு இலக்கோடு சிறந்த முறையில் பணியாற்றியதாக ரமணன் தெரிவித்தார். அந்த அடிப்படையில்தான் பிரபாகரன் மீது முழு நம்பிக்கை வைத்து மித்ராவின் சிறப்புக் குழு தலைவராக இப்போது அன்வார் நியமித்திருப்பார் என்று தாம் நம்புவதாவும் இந்த வேளையில் பிரபாகரனுக்கு தமது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு அவர் இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் இலக்கோடு செயல்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்பபு என்றும் ரமணன் கூறினார்.
இதனிடையே IKMA எனப்படும் மலேசிய கூட்டுறவு அமைப்பின் கூட்டுறவு சமூக மடானி நிகழ்வை தொடக்கிவைக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய ரமணன் இந்நாட்டில் கூட்டுறவு கழகங்களை முறைப்படுத்தி அவை வெற்றிகரமாக செயல்படுவதற்கு ஆக்கப்பூர்வ பங்காற்றியிருப்பதாக தெரிவித்தார். நாட்டில் கூட்டுறவு கழகங்கள் சீராக செயல்படுவதற்கு கூட்டுறவு கழகங்களை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கும் IKMA-வின் சேவை தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.