ஜோர்ஜ் டவுன், டிசம்பர் 22 – பினாங்கு, பட்டர்வொர்த், ஜாலான் ஊடாவிலுள்ள, கட்டடம் ஒன்றுக்கு முன்புறம், பெண் ஒருவரை கொடூரமாக வெட்டி கொலைச் செய்த ஆடவனுக்கு எதிராக இன்று நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படவுள்ளது.
சம்பந்தப்பட்ட 29 வயது ஆடவன், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவனுக்கு எதிராக குற்றம்சாட்டும் நடவடிக்கை, பினாங்கு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும்.
கால் முறிவு காரணமாக, நேற்று அவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட வேளை ; தொடர் மருத்துவ கண்காணிப்புக்காக அவன் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
அதனால், இன்று நண்பகல் வாக்கில், தொழிற்சாலை ஊழியரான அவ்வாடவனுக்கு எதிராக குற்றம்சாட்டும் நடைமுறையை, பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், அரசாங்க தரப்பு வழக்கறிஞர் குழுவினர் மேற்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பினாங்கு, ராஜா ஊடாவில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட 42 வயது பெண், அவ்வாடவனின் உறவுக்காரர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஏற்கனவே திருமணமான அப்பெண் மீது ஒருதலைப்பட்ச காதல் கொண்ட அவ்வாடவன், அவரை கொடூரமாக வெட்டிக் கென்ற பின்னர், பினாங்கு பாலத்திலிருந்து ஆற்றில் குதித்தான். எனினும், பின்னர் அவன் காப்பாற்றப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.