
கோலாலம்பூர், ஜூலை 14 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சூர், நகைச்சுவை நடிகர் ஹரித் இஸ்கண்டார் (Harith Iskander) தன்னை ‘பொந்தியானாக்’ (Pontianak) மற்றும் ‘போச்சோங்’ (Pocong) போன்ற பேய்களுடன் ஒப்பிட்டு கேலி செய்ததாகக் கூறி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த ஜனவரி 17-ஆம் தேதி மலாக்காவில் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்ச்சியில், ‘தோயோல்’ (Toyol), ‘பொந்தியானாக்’ (Pontianak) மற்றும் ‘போச்சோங்’ (Pocong) படங்களை காட்டிய பின்னர் ரோஸ்மாவின் புகைப்படத்தைக் காட்டி, “மிகவும் பயமுறுத்தும் உருவம்” என நகைச்சுவையாகப் பேசியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதன் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டதுடன், உடல் தோற்றத்தையும் இழிவுபடுத்தியதாகவும் ரோஸ்மா தெரிவித்துள்ளார்.
டிக்டாக்கில் பரவிய காணொளிகள் தனது நற்பெயருக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறி, இழப்பீடு, சர்ச்சைக்குரிய உள்ளடக்கத்தை அகற்ற உத்தரவு மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பையும் அவர் கோரியுள்ளார்.
இதற்கிடையில், ஹரித் இஸ்கண்டார் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். டிக்டாக்கில் வெளியானவை முழுமையற்ற, திருத்தப்பட்ட காணொளிகள் என்றும், அவற்றை பதிவேற்றியது தானல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது நகைச்சுவை நிகழ்ச்சி நையாண்டி மற்றும் கலை வெளிப்பாட்டின் ஒரு பகுதியாகும்; மலேசிய அரசியலமைப்பின் கருத்துச் சுதந்திரத்தின் கீழ் அது பாதுகாக்கப்படுகிறது என்றும் அவர் வாதிட்டுள்ளார்.



