
செம்போர்னா, மே-20 – சபா, சிப்பாடான் தீவின் கரையோரப் பகுதியில் முக்குளிப்பு நடவடிக்கையில் ஆர்வமாக இறங்கிய சீன நாட்டு சுற்றுப் பயணி, மனைவியின் கண் முன்னே கடலில் மூழ்கி மாண்டார்.
37 வயது அவ்வாடவர் நேற்று காலை 10.45 மணியளவில் எந்தவொரு கண்காணிப்பும் பயிற்சியாளரின் அனுமதியும் இல்லாமல் ஆர்வக்கோளாறில் கடலில் குதித்தார்; அப்போது அவரின் மனைவியும் படகில் இருந்தார்.
எனினும், சிறிது நேரத்திலேயே அவர் பதற்றமடைந்து தத்தளித்து கடைசியில் மனைவி முன்னே மூழ்கியும் போனார்.
பிறகு முக்குளிப்பாளர்களில் ஒருவர் கடலில் குதித்து தேடியதில் 25 மீட்டர் ஆழத்தில் அந்நபர் சுயநினையற்ற நிலையில் மீட்கப்பட்டார்.
கரைக்குக் கொண்டு வரப்பட்டு முதலுதவி கொடுக்கப்பட்டவர் உயிரிழந்து விட்டதை மருத்துவமனை உறுதிச் செய்தது.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸ், சம்பந்தப்பட்ட உல்லாசத் தலத்தில் முக்குளிக்கும் நடவடிக்கையில் பங்கேற்க வந்திருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 8 முக்குளிப்பாளர்களில் அவரும் ஒருவராவார் என்பதை கண்டறிந்தது.
உண்மையில், ஒரு பயிற்சியாளர் மற்றும் 4 தொழில்முறை முக்குளிப்பாளர்கள் கண்காணிப்பின் கீழ் அவர்கள் அந்நடவடியையில் இறங்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், மரணமடைந்தவரோ, தன்னிச்சையாக கடலில் முக்குளித்து வீணே உயிரை விட்டுள்ளார்.