ஷா அலாம், ஜன 21 – நாடு முழுவதிலும் உள்ள இந்திய சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் உயரிய தொழில் திறன் மற்றும் தொழிற் பயிற்சிகளை பெறுவதற்கு கூடுதலான வாய்ப்புகள் வழங்கப்படும் என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் தெரிவித்திருக்கிறார். கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் இந்திய சமூகத்தினர் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு இந்த நடவடிக்கை அமைவதாக அவர் கூறினார். கல்வியின் மூலமாக மட்டுமே வறுமையை துடைத் தொழிக்க முடியும் என்பதில் தாம் உறுதியாக நம்புவதாகவும் அவர் கூறினார்.
தேசிய TVET மன்ற தலைவர் என்ற முறையில் இந்திய மாணவர்கள் உயர் தொழில் திறன் பயிற்சியை பெறுவதற்கு கூடுதலான இடங்களும் வாய்ப்புகளும் வழங்கப்படும் என ம.இ.கா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரனிடம் தாம் தெரிவித்திருப்பதையும் ஸாஹிட் சுட்டிக்காட்டினார். IRDKL மாநாட்டு மண்டபத்தில் ஒற்றுமை பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார். தொழிற்நுட்பத்துறையில் உயரிய திறன்களை பெறுவதற்கான வாய்ப்புகளை இந்திய மாணவர்கள் பெறுவதற்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும். இதன்வழி உயரிய வருமானத்தை பெறுவதற்கான சந்தர்ப்பத்தையும் அவர்கள் ஏற்படுத்திக்கொள்ள முடியும் என ஸாஹிட் சுட்டிக் காட்டினார்.