புதுடெல்லி, ஜனவரி 2 – கருந்துளைகள், நியூட்ரோன் நட்சத்திரங்கள் போன்ற விண்வெளி பொருட்களை ஆய்வுச் செய்யும் எக்ஸ்போசாட் (XpoSat) செயற்கைகோளை சுமந்து செல்லும் ராக்கெட்டை, இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சியது.
உள்ளூர் நேரப்படி, நேற்று ஜனவரி முதலாம் தேதி, காலை மணி 9.10 வாக்கில், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்திலிருந்து அது பாய்ச்சப்பட்டது.
2021-ஆம் ஆண்டு, முதல் முறையாக, கருந்துளைகளை ஆய்வுச் செய்யும் திட்டத்தை நாசா அறிமுகம் செய்தது. அதன் பின், அம்முயற்சியை கையில் எடுத்திருக்கும் இரண்டாவது உலக நாடாக தற்போது இந்தியா திகழ்கிறது.
X-ray Polarimeter Satellite எனப்படும் எக்ஸ்போசாட் செயற்கைக் கோள், கருந்துளைகள், நியூட்ரோன் நட்சத்திரங்கள் போன்ற அரிய வானியல் நிகழ்வுகளை, இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ளும் ஆற்றலை கொண்ட அதி நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்தார்.
எக்ஸ்போசாட் செயற்கைக் கோள், ஐந்து ஆண்டுகாலம் விண்வெளியில் இருந்து வானியல் நிகழ்வுகளை ஆய்வுச் செய்யும் என கூறப்படுகிறது.
கடந்தாண்டு சந்திரயான்-3 வெற்றிக்கு பிறகு, சூரியனை ஆய்வுச் செய்வதற்காக, ஆதித்யா எல்1 திட்டத்தை தொடங்கிய இஸ்ரோ, புத்தாண்டில், இந்த எக்ஸ்போசாட் செயற்கைக் கோளை விண்ணில் பாய்ச்சியுள்ளது