கோலாலம்பூர், நவ 16 – உணவு விலைகள் அதிகமாக இருப்பது மற்றும் தீவிரவாத சமய சிந்தாந்தம் ஆகியவற்றினால் லங்காவிக்கு சுற்றுப்பயணிகள் வருகை குறைந்ததாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்திருக்கிறார். லங்காவியின் சுற்றுலா வீழ்ச்சிக்கு கெடா மந்திரிபெசார் முஹம்மட் சனுசி போன்ற அரசியல்வாதிகள் தம்மீது குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமது முகநூலில் பதிவேற்றம் செய்த அறிக்கையில் தியோங் கிங் சிங் கேட்டுக்கொண்டார். நாம் விரும்புகிறோமோ , இல்லையோ லங்காவி குறித்து பல சுற்றுப்பயணிகளிடமிருந்து நிறைய புகார்களை தாம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். அவற்றில் உணவு விலை மற்றும் தங்கும் விடுதிகளின் விலை அதிகமாக இருப்பதும் முதன்மை காரணங்களாகும். அதற்கு அடுத்த நிலையில் தீவிரவாத சமய சிந்தாந்தங்கள் வேகமாக பரவுவதால் சுற்றுப்பயணிகள் பொருத்தமற்ற சூழ்நிலையில் இருப்பதாக உணர்வதும் காரணம் என அவர் கூறினார்.