
கிள்ளான், ஜூன்-16 – கிள்ளான் ஆற்றின் வெள்ளத் தடுப்புத் திட்டத்தின் நெடுகிலும் குழந்தைகள் உட்பட 10 பேருக்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், மீட்டெடுக்கப்பட்டு வரும் அந்த ஆற்றின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் யதார்த்தம் வெளிப்படுகிறது.
SMG எனப்படும் சிலாங்கூர் கடல்சார் நுழைவாயில் முன்னெடுப்பின் கீழ் தற்போது இந்த வெள்ளத் தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உடல்கள் கண்டெடுக்கப்பட்டது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல, மாறாக ஆற்றை ஆழப்படுத்தும் மற்றும் அகலப்படுத்தும் பணிகள் 2022 நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் நிகழ்ந்து வரும் ஒன்றென, Landasan Lumayan Sdn Bhd நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷைஃபுல் அஸ்மென் நோர்டின் கூறினார்.
தொடர்ச்சியாக 3 உடல்களைக் கூட கண்டுபிடித்துள்ளதாக அவர் சொன்னார்.
உடல்கள் தவிர, குளிர்சாதன பெட்டிகள், லாரி டயர்கள், படுக்கைகள், மெத்தைகள், சோஃபாக்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற பல்வேறு வகையான கனரக கழிவுகள் கிள்ளான் ஆற்றுப் படுகையில் கண்டெடுக்கப்பட்டன.
இது மோசமான ஆற்றுத் தூய்மைக்கேட்டை பிரதிபலிப்பதோடு ஆற்றை ஆழப்படுத்தும் பணிகளுக்கும் சவால் விடுகிறது.
இன்று கோத்தா கெமுனிங்கில் உள்ள SMG 8-ஆவது மண்டலத்தின் வெள்ளத் தடுப்புத் திட்ட தளத்தைப் பார்வையிட்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.