
தெஹ்ரான், ஜூலை-28-அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயல்வதாக பரவி வரும் செய்திகளை ஈரானிய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அமெரிக்காவிடம் கெஞ்சுவது _’ஈரானின் இரத்தத்திலேயே இல்லை’_ என அந்நாட்டரசு காட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஈரானுடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் சாத்தியம் என்றும், ஈரான் பேச்சுவார்த்தையை விரும்புவதாகவும் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால், ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகே, அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்க ஈரான் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
மத்தியக் கிழக்கு நாடுகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே தகவல்கள் பரிமாறப்பட்டு வந்தாலும், அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்பதை ஈரான் உறுதிப்படுத்தியது.
அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளை நீக்கி, அனைத்துலக விதிகளை மதித்து நடந்துகொண்டால் மட்டுமே தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்றும் ஈரான் தலைமை வலியுறுத்தியுள்ளது.
இரு நாடுகளும் தங்களது நிபந்தனைகளில் உறுதியாக இருப்பதால், வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையேயான இந்த அரசியல் முட்டுக்கட்டை மேலும் தொடரும் என்றே அனைத்துலக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.



