
புத்ராஜெயா, ஏப்ரல்-26-மலேசியாவின் டிஜிட்டல் உருமாற்ற முயற்சிக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
NADI எனப்படும் தேசிய தகவல் பரப்பு மையங்கள் இப்போது அனைத்துலகத் தொலைத் தொடர்பு சங்கமான ITU-வின் கீழ் டிஜிட்டல் உருமாற்ற மையங்களின் கட்டமைப்பில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளன.
பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில், இந்த அங்கீகாரத்தின் மூலம் உலகளாவிய ITU-DTC கட்டமைப்பில் இணைந்த 16-ஆவது மையமாக NADI உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதன் மூலம், Cisco போன்ற உலகளாவிய நிறுவனங்களின் பயிற்சித் திட்டங்களை மலேசியா இனி அணுக முடியும்.
நாடு முழுவதும் உள்ள 1,099 NADI மையங்களின் வாயிலாக சுமார் 180, 000 தொழில்முனைவோருக்கு உயர்தர டிஜிட்டல் பயிற்சிகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“மக்களுக்குத் தொழில்நுட்பம் கிடைப்பது மட்டுமல்லாமல், அதைக்கொண்டு அவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்வதே எங்களின் தெளிவான நோக்கம்” என ஃபாஹ்மி குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் நடைபெற்ற இந்த அறிவிப்பு, ஆசிய-பசிஃபிக் வட்டாரத்தில் டிஜிட்டல் வளர்ச்சியில் மலேசியாவை ஒரு முன்னணி நாடாக மாற்றும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.



