
வாஷிங்டன், ஆகஸ்ட்-31-அமெரிக்கா, Arizonaவில் உள்ள புகழ்பெற்ற Grand Canyon தேசிய பூங்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 20க்கும் அதிகமானோர் காணாமல் போயிருப்பதாக அஞ்சப்படுகிறது. பூங்காவின் உட்பகுதியில் உள்ள Bright Angel Canyon மற்றும் Phantom Ranch ஆகிய பகுதிகளில் கடந்த சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் அத்திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக அமெரிக்க தேசிய பூங்கா நிர்வாகம் (NPS) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Arizona பொதுப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து மீட்புக் குழுவினர் இதுவரை 62-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இதுவரை யாருக்கும் பெரிய காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
சனிக்கிழமை அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாகத் தங்களுக்குத் தெரிவிக்குமாறு தேசிய பூங்கா நிர்வாகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
திடீர் வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மேலும் அதிகமான திடீர் வெள்ளப் பெருக்குகள், மண் சரிவுகள், பாறை சரிவுகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.



