
அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள் அலட்சியப்படுத்தப்படுகிறதா? – அதிகரிக்கும் புகார்கள்
கோலாலம்பூர், பிப்ரவரி 16 –
அரசுத் துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள் பதிலளிக்கப்படாதது ஏமாற்றமும் வேதனையும் அளிப்பதோடு இது தொடர்பாக மக்களிடமிருந்து அதிகமான புகார்கள் வருவதாக ம.இ.காவின் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ T. முருகையா தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தொலைபேசி என்பது பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்திற்கிடையிலான முக்கிய தொடர்பு வழிமுறையாகும்.
அழைப்புகள் பதிலளிக்கப்படாதபோது, பொதுமக்களுக்கான அரசு நடவடிக்கைகள் தாமதமாகி, ஏமாற்றத்தை ஏற்படுத்துவதோடு, அரசுச் சேவையின் மதிப்பையும் பாதிக்கக்கூடும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் முருகையா சுட்டிக்காட்டினார்.
அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்கு திறமையான, நட்பான மற்றும் தொழில்முறை சேவையை வழங்க வேண்டிய பொறுப்பு உடையவர்களாக இருக்க வேண்டும். தொலைபேசி அழைப்புகளை அலட்சியம் செய்வது நேர்மை மற்றும் செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட அரசுச் சேவையின் அடிப்படை நோக்கத்திற்கு முரணாக அமைந்துள்ளது.
எனவே இதனை கருத்திற்கொண்டு பொதுமக்களின் புகார்களுக்கு பதில் அளிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு இருப்பதை அரசாங்க பணியாளர்கள் உணர்ந்து செயல்படுவதற்கு மடானி அரசாங்கம் ஆக்கப்பூர்மான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகையா அறைகூவல் விடுத்தார்.



