
கோலாலம்பூர், ஆகஸ்ட்.21- தேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, RapidKL நிறுவனம் ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் குறிப்பிட்ட ரயில் மற்றும் பேருந்துகளின் சேவை நேரத்தை 24 மணி நேரம் நீட்டிக்கவிருக்கிறது. LRT, MRT மற்றும் KL Monorel உள்ளிட்ட அனைத்து ரயில் சேவைகளும் அவற்றில் அடங்கும்.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, பல முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும், தேவை மற்றும் நிலையங்களில் சூழல்களுக்கு ஏற்ப அவை ஒருங்கிணைக்கப்படும். அதே சமயம் Sunway வழித்தடத்திற்கான BRT, தேர்ந்தெடுக்கப்பட்ட பேருந்து மற்றும் On-Demand சேவைகளும் 24 மணி நேரம் வழங்கப்படும் என RapidKL கூறியது.
ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தினத்தின் முன்தினக் கொண்டாட்டங்கள் மற்றும் மறுநாள் காலையில் புத்ராஜெயாவில் நடைபெறும் தேசிய தினக் கொண்டாட்டங்களையொட்டி பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் நோக்கில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புத்ராஜெயாவில் நடைபெறும் கொண்டாட்ட இடத்திற்குச் செல்பவர்களுக்காக, இரண்டு வழித்தடங்களில் 103 இலவச feeder பேருந்து சேவைகளும் வழங்கப்படுகின்றன.
இவ்வேளையில் பயணிகளின் நடமாட்டம் சீராக இருப்பதை உறுதி செய்யவும் நிலைமையைக் கண்காணிக்கவும் 5,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்படவிருப்பதாக RapidKL குறிப்பிட்டது. அதே வேளை தேசிய தினக் கொண்டாட்டத்திற்குச் செல்ல பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அது பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது.



