
கங்கார், ஆகஸ்ட்.21- பெர்லிஸ், Padang Besarரில் பெட்ரோல் நிலையமொன்றில் பெண் ஒருவர் மானியம் பெற்ற எரிபொருளை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் அம்பலமாகியுள்ளது. 29 வயதான அந்த உள்நாட்டு பெண் நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் பணியில் ஈடுபட்டிருந்த அமலாக்கக் குழுவினரால் கைது செய்யப்பட்டதாக உள்நாட்டு வாணிக, வாழ்க்கைச் செலவின அமைச்சின் பெர்லிஸ் மாநில இயக்குனர் Rohaida Hassan தெரிவித்தார்.
ஒரு வார கால கண்காணிப்புக்குப் பிறகே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பெண் பயன்படுத்திய Toyota Camry காரில் நடத்தப்பட்ட சோதனையில், பெட்ரோல் நிரப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கூடுதல் எரிபொருள் தொட்டி ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. அதனை அடுத்து 20,000 ரிங்கிட் மதிப்புடைய வாகனமும் 258 ரிங்கிட் 70 சென் பெறுமானமுள்ள 130 லிட்டர் பெட்ரோலும் பறிமுதல் செய்யப்பட்டதாக Rohaida கூறினார்.
அச்சம்பவம் 1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிரிவு 21-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. அப்பெண் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 1 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அவை இரண்டுமே விதிக்கப்படலாம்.



