
காபுல், ஜூன்-26 – ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு, அங்குள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் விவேகக் கைப்பேசி பயன்படுத்துவதற்கு அதிரடியாக முழு தடை விதித்துள்ளது.
இராணுவம் மற்றும் பொது துறைகள், நீதிமன்ற நீதிபதிகள் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் இந்த தடை உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது.
இந்த உத்தரவை மீறி விவேகக் கைப்பேசியைப் பயன்படுத்துபவர்களின் கைப்பேசிகள் அடித்து நொறுக்கப்படும் என்றும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்றும் தலிபான் இராணுவ நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
அன்றாட அலுவலகப் பணிகள், முக்கிய தகவல்தொடர்புகள் மற்றும் வாட்சப் வழி செயல்பாடுகளுக்கு விவேகக் கைப்பேசிகளையே நம்பியிருந்த அரசு ஊழியர்கள், இந்த திடீர் தடையால் தங்களது பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதாக கவலைத் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமை மீறல்களை உலகுக்குக் கொண்டு சேர்ப்பதையும், மக்கள் சுதந்திரமாக தகவல் பரிமாறுவதையும் தடுப்பதற்காகவே தலிபான் அரசு இந்த புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



