
தெஹ்ரான், மார்ச்-5-இஸ்ரேல் – அமெரிக்க கூட்டுப் படைகளின் வான் தாக்குதலில் ஈரானிய உச்சத் தலைவர் ஆயதொலா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், இது எப்படி சாத்தியமானது என்பது குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமேனி கடந்த வாரம், குடும்பத்துடன் கொல்லப்பட்டார்; அவருடன் அமைச்சர்கள், இராணுவ உயரதிகாரிகள் என பலரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கமேனியையும் அதிகாரிகளையும் கண்காணிக்க, இஸ்ரேலிய உளவு அமைப்பான Mossad ஈரானின் போக்குவரத்து கேமராக்களைப் பயன்படுத்தியதாக, பிரிட்டனின் Financial Times ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தலைநகர் தெஹ்ரானில் செயல்படும் போக்குவரத்துக் கண்காணிப்பு கேமரா முறைக்குள் சில ஆண்டுகளுக்கு முன்பே Mossad கச்சிதமாக ஊடுருவி hack செய்துள்ளது.
அவ்வகையில் அண்மையில் அதில் ஒரு கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் தான் முக்கியத் திருப்பத்திற்கு வழிவகுத்துள்ளன.
தெஹ்ரானில் பாதுகாப்பு குழுவினரின் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடம் அதில் தெளிவாகத் தெரிந்தது.
சுதாகரித்துக் கொண்ட Mossad, பாதுகாப்பு அதிகாரிகளின் முகவரி, வேலை நேர மாற்றம், அவர்கள் பாதுகாத்த முக்கியப் புள்ளிகளின் அன்றாட நடமாட்டம் உள்ளிட்ட விவரங்களை தொகுத்தது.
திரட்டப்பட்ட முக்கியத் தகவல்கள் AI கருவிகள் மற்றும் மென்பொருட்கள் மூலம் விரிவாக அலசப்பட்டு, கமேனியின் நகர்வுகள் வரைபடமாக்கப்பட்டன.
இந்நிலையில் தான் பிப்ரவரி 28-ஆம் திகதி தெஹ்ரானின் பாஸ்துார் சாலையில் அவர் ஒரு கூட்டத்தில் பங்கேற்பது தெரிந்து, அதையே இறுதி இலக்காக வைத்து அவரைக் கொல்ல முடிவுச் செய்யப்பட்டது.
அதுவும், பாதுகாப்பு எச்சரிக்கை தகவல்கள் கசிந்து விடாமல் தடுக்க, கைப்பேசி சேவைகள் துண்டிக்கப்பட்டன.
அதன் பிறகே இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வான் படைகள் இணைந்து 30 அதிநவீன குண்டுகளை வீசி கமேனியைக் கொன்றன.
தனதுயிருக்கு பெரும் அச்சுறுத்தல் இருந்ததால், இரகசியமான இடத்தில் வாழ்ந்து வந்து, முக்கியமான நேரங்களில் மட்டுமே வெளியில் தலைக்காட்டியவர் கமேனி.
இதனால் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாமல் பல வருடங்களாகத் திணறிய இஸ்ரேலிய-அமெரிக்கப் படைகளுக்கு, கடைசியில் போக்குவரத்து கேமராக்கள் உதவி புரிந்துள்ளன..



