
ஜகார்த்தா, ஆகஸ்ட்-15,கிழக்கு இந்தோனேசியாவின் கடல் பகுதியில் இன்று அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, புளோரஸ் (Flores) தீவில் உள்ள Ende நகருக்கு வடமேற்கே சுமார் 68 கிலோ மீட்டர் தொலைவில், வெறும் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அதே பகுதியில் 5.6 மற்றும் 5.9 ரிக்டர் அளவுகளில் இரண்டு வலுவான பின்னதிர்வுகளும் பதிவாகின.
கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக இந்தோனேசியாவின் வானிலை மற்றும் புவி இயற்பியல் மையமான BMKG எச்சரித்துள்ளது.
ஜப்பான் தொடங்கி தென்கிழக்காசியா மற்றும் பசிஃபிக் பெருங்கடல் படுகை வரை நீளும் தீவிர நில அதிர்வு மண்டலமான பசிபிஃக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால், இந்தோனேசியா மற்றும் அதன் சில அண்டை நாடுகள் அடிக்கடி நிலநடுக்கங்களை எதிர்கொள்கின்றன.



