
குவாலா திரங்கானு, மே-6-மலேசிய இனங்களுக்கு இடையிலான உறவு ஒரு “கவலைக்குரிய திருப்புமுனையில்” இருப்பதாக திரங்கானு மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ Dr அஹ்மாட் சம்சுரி மொக்தார் எச்சரித்துள்ளார்.
திரங்கானு மாநில சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய அவர், சமூகங்களுக்கு இடையே நிலவும் விரிசல் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அது அமைதியாக மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மலேசியாவின் பன்முகத்தன்மை ஒரு மிகப்பெரிய வரம் எனக் கூறிய பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான சம்சுரி, முறையாக நிர்வகிக்கத் தவறினால், அது பேரழிவாக மாறக்கூடும் என்றார்.
ஜனநாயகத்தைப் போற்றும் நாடுகள் கூட இத்தகைய தவறான நிர்வாகத்தால் அமைதியை இழந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்திற்காக மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல; மாறாக, மலாய்க்காரர்கள், சீனர்கள், தமிழர்கள் மற்றும் கடசான், இபான் உள்ளிட்ட அனைத்து மக்களையும் பிரதிநிதிக்கவே மக்கள் அவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாக, அரசியல் தலைவர்களுக்கு சம்சுரி நினைவூட்டினார்.
இன்று நிலவும் இந்தச் சிறிய விரிசல்கள், எதிர்காலத்தில் நாட்டின் நிலைத்தன்மையையே ஆட்டங்காணச் செய்யும் மாபெரும் பிளவாக மாறக்கூடும் எனவும் அவர் எச்சரித்திருப்பது தற்போதையச் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது.



