
கோலாலம்பூர், ஜூலை.14 – மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, இம்மாதம் இரு நாட்களுக்கு 2026 அனைத்துலக ஒழுங்குமுறை மாநாட்டை நடத்தவிருக்கிறது. அம்மாநாடு கோலாலம்பூர் Shangri-Laவில் ஜூலை 21 மற்றும் ஜூலை 22 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அடுத்த டஜிட்டல் தலைமுறை குறித்த உரையாடலுக்கான உலகளாவிய தளத்தை அமைத்துத் தருவதோடு அனைத்துலக ஒழுங்குமுறை உரையாடல்களில் மலேசியாவின் குரலை வலுப்படுத்த இம்மாநாடு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வகையில் இம்முறை அம்மாநாடு ‘அடுத்த டிஜிட்டல் சகாப்தத்தை வடிவமைத்தல்: ஒழுங்குமுறை, மீள்திறன் மற்றும் நம்பிக்கை” என்ற கருப்பொருளைக் கொண்டிருக்கிறது. அம்மாநாட்டை தகவல், தொடர்புத்துறை அமைச்சர் Datuk Seri Fahmi Fadzil தொடக்கி வைக்கவிருக்கிறார். தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை எதிர்நோக்கும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஒழுங்குமுறைச் சிக்கல்களை ஆராய ஒழுங்குமுறையாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் நிபுணர்களை அம்மாநாடு ஒன்றிணைக்கும்.
அதே சமயம் உலகளாவிய தொலைத்தொடர்புக் கொள்கையில் மலேசியாவை ஒரு முன்னணி நாடாக நிலைநிறுத்துவதையும், அனைத்துலக ஒழுங்குமுறை விவகாரங்களில் MCMC-யின் ஈடுபாட்டை மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்புகள், சமூக ஊடகங்களில் கருத்துச் சுதந்திரத்திற்கும் தேசியப் பாதுகாப்பிற்கும் இடையிலான நுட்பமான சமநிலை, தரவு தனியுரிமை, டிஜிட்டல் புத்தாக்கம், மற்றும் உள்ளடக்க நெறிப்படுத்தல் மூலம் உலகளாவிய தகவல் தொடர்பு நிர்வாகத்தின் எதிர்காலம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு விவாதங்கள் நடைபெறும். மாநாட்டில் உள்நாட்டு ஆளுமைகள் உள்ளிட்ட புகழ்பெற்ற பேச்சாளர்கள் கலந்து கொள்கின்றனர்.



